Tuesday, February 12, 2013

காவற்பெண்டுகள் தோழிகளின் துயரம் சொல்லும் வஞ்சியர் காண்டம்





 இராதெ முத்து 
இளங்கோவடிகளின் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தை மறுவாசிப்பு செய்த முறையில் நிகழ்த்தப்பட்ட  நாடகம் பிரளயனின் வஞ்சியர் காண்டம்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க இடம் தேடியதும்,வடபுலம் சென்று கல் எடுத்து வந்தமையும்,கோட்டம் அமைத்தமையும் ஆன காட்சிகள் கொண்டது இளங்கோவின் வஞ்சிக்காண்டம்.

பிரளயனின் வஞ்சியர் காண்டமோ கன்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு,கண்ணகியின் தோழி தேவந்தி,ஆயர்சேரி மாதரி மகள் ஐயை ஆகியோர் வழி கண்ணகியின் தெய்வப் பிம்பம் கலைக்கப்பட்டு,அவளுள் கனன்ற எண்ணங்களை,மதிப்பீடுகளை,மனிதர்கள் குறித்த அளவுகளை அசை போடும் நிகழ்வின் வடிவம்.

நீர் கலசத்தோடும் முளைப்பாரிகளோடும் கூட்டம் கூட்டமாக மக்கள் குடவாயில் கோட்டம் காணச் செல்கின்றனர்.இவர்களோடு கோட்டம் காண செல்கிறார்கள் காவற்பெண்டு,தேவந்தி,ஐயை.

தேவந்தியும் ஐயையும் கண்ணகியின் சிறு பருவம்,அவளின் வளர்ப்பு முறை,மாதவி குறித்து கண்ணகியின் உயர்மதிப்பீடு ,புகாரில் தனிமையில் கண்ணகி வாழ்ந்த அவலம் ,மதிரையில் கோவலனோடு வாழ்ந்த துயரம் என காவற்பெண்டிடம் விவாதித்து விவாதித்து தாங்கள் அறிந்து கொள்ளும் முறையினூடாக பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கண்ணகியை,இதுவரை அறியப்படாத நவீன கண்ணகியை நம்மோடு உலவவிட்டிருக்கிறார்கள்.

 நாகநாட்டிலிருந்து புகாருக்கு,மதுரைக்கு  காவற்பெண்டுகள் தாங்கள் அடிமையாய் வந்த வரலாற்றை கண்ணகிக்கு முந்தைய மூன்று தலைமுறைகளின் வரலாறு தொட்டு பேசுவதும்,மாசாத்துவான் மகளுக்கு பால் ஊட்டுவதற்காக காவற்பெண்டுகள் வணிககுலத்தாரால் கருவுறச் செய்யப்பட்ட கண்ணீர் கதையையும்,தன் மடியில் வேல்கம்பு தாங்கி வெதுவெதுப்பான குருதியை ஓடவிட்டு உயிர்துறந்த தலைக்கோலியான தன் காதலனை நினைத்து காவற்பெண்டு அழுவதும் அரற்றுவதுமான காட்சிகள் வழி ,இலக்கியத்தில்,நாடகத்தில் பதியப்பெறாத காவற்பெண்டுகள்,தோழிகளின் துயரக்கதையை நாடகம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.

கணவனுக்காக பிறந்த வீட்டிற்காக ஊருக்காக தனது ஆசைகள் விருப்பங்கள் நசுக்கப்படுவதையும்,தன் துயரம் மாறி நல்வழி பிறக்க தீர்த்தமாடி கோயில்கள் வழிபட்டு வரவா என தேவந்தி கண்ணகியிடம் கேட்குமிடத்தில் `உன்னைவிட்டு பிரிந்த உன் கணவனுக்காக எத்தனை தீர்த்தமாடினாய் உன் கணவன்உன்னிடம்  வரவில்லையே;கோவலன் மட்டும் எப்படி மீண்டு வருவான்’ எனக் கேட்டு கண்ணகி சொல்லும்`உன் அகத் தீர்த்தமாடி உன்னையே அறிவது நல்லது’என்கிற இடம் மூடத்தனத்தை,தெய்வமின்மையை விமர்சிக்கும் இடமாக துலக்கமுறுகிறது.

பட்டறிவால் சுயசிந்தனை கொண்ட பெண்ணாக, சமுகத்தை உணரும் பென்ணாக ,மாறிய கண்ணகியை பாண்டியனிடம் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று சிலம்பை உடைத்து நியாயம் கோரிய பெண்ணாகிய கண்ணகியை ,இயக்கி என்றும் கொற்றவை என்றும் காளி என்றும் மாற்றி, பின் தொடரும் சமுகத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தும் திருப்பணியை செய்த சேரன் செங்குட்டுவனின் அதிகார முகத்தை கிழித்தெறியும் புதிய புனைவாக அழகியலோடு வெளிப்பட்டிருக்கிறது வஞ்சியர் காண்டம்.

தேசிய நாடகப்பள்ளி,மண்டல வள மையம்-பெங்களூரு,தென்னக பண்பாட்டு மையம்-தஞ்சாவூர் இணைந்து நடத்தும் ஒருமாத கால உண்டு உறைவிட நாடகப் பயிலரங்க பங்கேற்பாளர்கள் வழங்கும் வஞ்சியர் காண்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ராஜூ,நாடகப்பனுவல் பிரளயன்.

மேடையில்:க.பிரியங்கா-கண்ணகி/சே.அஜிதா-காவற்பெண்டு/ம.வித்யா-தேவந்தி/ஆ.ரூபா-ஐயை/சு.நந்தினி-மாதரி/த.மகேஸ்வரி-கண்ணகியின் தாய்/மதியழகன் -மாநாய்க்கன்/ச.மணிகண்டன் -கோவலன்/சாரதி கிருஷ்ணன்-கூத்தன்/மா.மோகன்-உவச்சன்/பிரகதீஷ்வரன்- பூசகன்


2013 பிப்ரவரி 12 அன்று சென்னையில் நாடகத்தை நிகழ்த்த மேடை அமைத்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவல்லிக்கேணி கிளை மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

No comments:

Post a Comment